Tuesday, 10 March 2015

☼23-விழியும் வழியும்-23☼ப்ரபோத ஸமயே நிர்வாணம்۞தாஸோஹம் பிரபு۞

இப்போது நாம் ஜீவன், ஜகத் , பரம் ஐக்கியத்தைப் பார்போம்

ப்ரபோத ஸமயே நிர்வாணம்

பொய்யை பொய் பொய்யாக்கி
மெய்யை மெய் மெய்யாக்கி
உள்ளது உள்ளபடி உள்ளதைறிந்து
அனைத்திலும் அதுவேயென நீயும்
அழிந்தாலோ மாறினாலோ தோன்றினாலோ
அது அதுபடியே அதுவாகவே
பாகியக்கரணம் அந்தக்கரணம் எத்தனையோ
இதுவோ எதுவோ அதுதானே
அது இயக்கத்தாலியங்கும் அதுயிதுவும்
இதிலும் எதிலும் அதுதானே...

                                                   _ தாஸோஹம்பிரபு

நானே.
இருப்பது அதுவே..
அனந்தமே ஆனந்தமாகியது அது...
அதிலே லயமானால் சொரூபம் நீயே....

                                                  _ தாஸோஹம். . பிரபு


Monday, 9 March 2015

☼22-விழியும் வழியும்-22☼ - பிரபஞ்சத்தின் தன்மை ‍‍۞தாஸோஹம் பிரபு۞

       நாம் இப்போது பிரபஞ்சத்தின் தன்மையைப் பற்றி ஆராய்வோம். ஐம்பூதங்களான நிலம், நீர், நெருப்பு, ஆகாசம் மற்றும் காற்று என்ற கூட்டில் ஆனது பிரபஞ்சம். இதில் ஆகாசம் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து இருக்கிறது. ஆனால் அத்தகைய ஆகாசமும் பிரளய காலத்தில் இல்லாது போய்விடும். அதுவே ஜடவெளி என்று அழைக்கப்படும். ஆனால் பிரம்மம் இருந்தது இருந்த படியே இருக்கும். அதுவே ஆகாசத்தை உருவாக்கியது. பிரம்மமே அதனை தனக்குள்ளும் ஒடுக்கும், ஆதலால் இப்பிரபஞ்சத்தில் சூன்யம் என்று கிடையவே கிடையாது.

      இதில் ஆச்சரியப்படத் தேவையில்லை! பிரம்மம் இருந்தது இருந்தபடியே சலனமின்றி இருக்கிறது, இந்த மெய் ஞானத்தை அடைவதற்குத்தான் மதம் பயன்படுகிறது. ஒன்றும் இல்லை (சூன்யம்) என்று சொல்வதற்கு மதம் எதற்கு? பரம்பொருள் ஒன்று இருக்கிறது என்று சொல்வதற்கும் இந்த மெய்ஞானம் அடைவதற்குத்தான் மதம் பயன்படுகிறது.

பார்த்தஇடம் எல்லாம் பரவெளியாய்த் தோன் றஒரு
வார்த்தைசொல்ல வந்த மனுவே பராபரமே
                                    _ ஸ்ரீ தாயுமான சுவாமி

ஓம் பூர்ணமத : பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே |
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணவேவாசிஷ்யதே ||
                                    _ ஸ்வேதாச்வதரோபநிஷதம்

       அப்பால் இருப்பது பூரணம்; இயற்கையாய் இலங்குவது பூரணம்; பூரணத்தினின்று பூரணம் தோன்றியுள்ளது. பூரணத்தினின்று பூரணம் வந்திருந்தும் பூரணமே யாண்டும் உளது.

       இரவு நேரத்தில் இருளாக இருக்கிறது. அப்போது இருக்கும் பொருள் அனைத்தும் ஒன்றுமில்லாதபடி இருளாகவே தெரிகிறது. அதற்காக இருக்கும் பொருளை இல்லை என்று சொல்ல முடியுமா ? பொருளின் மீது வெளிச்சம் அற்று இருட்டாக இருக்கிறது. வெளிச்சம் இல்லை என்ற போது இருட்டு ஒன்று இருந்துதானாக வேண்டும். வெளிச்சத்தின் தன்மாற்றம் இருள், இருளின் தன்மாற்றம் வெளிச்சம். இவைகளுக்கு ஆதாரமாக இருப்பது பிரம்மம். இப்பிரபஞ்சத்தில் எதிர்மறையான இருள் வெளிச்சம் போன்று பலவிதம் இருக்கின்றது. இது எல்லாம் உருவாக காரணமாக இருப்பது பிரம்மம் ஒன்று மட்டும்தான்.

        இல்லாத ஒன்றில் (சூன்யம்) இருந்து எதுவும் உருவாகாது (வெளிப்படாது).

வான் ஆகி மண் ஆகி
            வளிஆகி ஒளி ஆகி
ஊன்ஆகி உயிர் ஆகி
            உண்மையும் ஆய் இன்மையும் ஆய்க்
கோன்ஆகி யான் எனதுஎன்று
            அவர் அவரைக் கூத்தாட்டு
வான்ஆகி நின்றாயை
            என் சொல்லி வாழ்த்துவனே!
                                  - திருவாசகம்

       விண், மண், காற்று, நெருப்பு, நீர், ஆகிய ஐப்பூதங்கள் ஆனது நீயே. உடலும் உயிரும் ஆனது நீயே, தோற்றத்தில் இருப்பவைகளும் தோன்றா நிலையில் இருப்பவைகளும் நீயே, உயிர்களுக்கு "யான் எனது" என்னும் ஜீவ வியக்தியைக் கொடுத்திருப்பவனும் நீயே. இவை யாவைக்கும் ஈசனாய் இருப்பவனும் நீயே, இவையாவின் செயல்களெல்லாம் உண்மையில் உன் செயல்களாம், அளவு கடந்த உன் மகிமைகளை என்னால் எப்படி விளக்க முடியும் !

       பரம்பொருளை நிர்க்குணபிரம்மம் என்றும் சகுணப்பிரம்மம் என்றும் இரண்டு வகைப்படுத்திப் பார்க்கலாம். ஆனால் இரண்டாக நம் வசதிக்காக பிரித்து பார்த்தாலும், உள்ளது ஒரே பரவஸ்து தான். குணம் குரி கடந்த நிர்க்குண்ப் பிரம்மத்திடம் (இயக்கும் சக்தி) இருந்து தான் குணம் குறியுடன் சகுணப்பிரம்மம் (இயங்கும் சக்தி) இயங்குகிறது. இந்த சக்தியின் கூடவே மாயை வெளிப்படுகிறது.

       மாயை மூன்று விதமாக வகைப்படுத்தி பார்க்கலாம். அறியாமை நீங்கிய போது மாயை என்பது இல்லை.
பிரகிருதி மாயை - இது தமோ குணத்துடன் கூடியது ஐஸ் கட்டிப் போன்றது.
அசுத்த மாயை - இது ரஜோ குணத்துடன் கூடியது. சூட்டின் மூலம் ஐஸ் கட்டியில் கரைந்த தண்ணீரைப் போன்றது.
சுத்த மாயை - இது சத்வ குணத்துடன் கூடியது. ஐஸ் கட்டியின் தண்ணீர் கொதிக்கும் போது அதிலிருந்து கிளம்பும் ஆவியைப் போன்றது.

எல்லாம் நினதுசெயல் என்றுஎண்ணும் எண்ணமும்நீ
அல்லால் எனக்குஉளதா ஐயா பராபரமே

மாயா ஜகம்இலையேல் மற்றுஎனக்குஓர் பற்றும்இலை
நீயேநான் என்றுவந்து நிற்பேன் பராபரமே.
                                                _ ஸ்ரீ தாயுமான சுவாமி
      ஓர் இருட்டரை (மாயை) அதில் சிறு விளக்கை (பிரம்மம்) ஏற்றினால் இருட்டு அப்போது காணாமல் போகும், அங்கு இருட்டு எங்கே போனது என்று தேடி பார்த்தாலும் கூட கிடைக்காது.

மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள்
மாயை மறைய வெளிப்படும் அப்பொருள்
மாயை மறைய மறைய வல்லார்கட்குக்
காயமும் இல்லைக் கருத்தில்லை தானே
                                                 _ திருமூலர்

எள்ளும் கரும்பும் ஏழு மலரும் காயமும் போல்
உள்ளும் புறமும் நின்றது உற்றறிவதெக்காலம்
                                                _ பத்திரிகிரியார்
 
      எள்ளினுள் எண்ணை மறைந்திருப்பதைப் போல, கரும்பினில் சுவை உறைந்திருப்பதைப் போல, மலரில் மணம் நிறைந்திருப்பதைப் போல, நம்மில் ஆன்ம சக்தியாய் இறைவன் மிளர்ந்திருக்கிறான்.

        சிலர் ஆத்மா வேறு பிரம்மம் வேறு என்று நினைத்துக் கொள்கிறார்கள். அது முற்றிலும் தவறு. உதாரணத்திற்கு, வீட்டினுள் மூன்று அறைகள் உள்ளது. சுவர்கள் இருப்பதால் மூன்று அறைகளும் மூன்று ஆகாசம் இருப்பதாக நினைக்கலாம் (ஆத்மா). ஆனால் அறைகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆகாசம் என்பது ஒன்றே (பிரம்மம்). நம் உடலில் இருக்கும் ஆத்மா வேறு மற்றவர்கள் உடலில் இருக்கும் ஆத்மா வேறு என்று பார்ப்பது தவறு அனைத்துமாக இருப்பது பிரம்மம் மட்டும் தான்.

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு
அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே
                                                _ திருமந்திரம்
    
       சிங்கம் வயிற்றிலிருந்து பிறந்தது கட்டாயம் சிங்கமாகத்தான் இருக்க வேண்டும். இதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அதுப்போலவே மாங்கொட்டையில் முளைத்து வந்தது மா மரமே தவிர அதற்கு அன்னியமாக இல்லை என்பதை நம் ஊனக்கண்ணால் பார்த்திருக்கிறோம். அதுபோலவே, பிரம்மத்திலிருந்தே வந்தது பிரம்மமாக இங்கு யாண்டும் இருக்கிறது. இதற்கு அன்னியமாக யாது ஒரு வஸ்துவும் இல்லை.

வித்துஅன்றி யாதும் விளைவது உண்டோ நின் அருள்ஆம்
சித்துஅன்றி யாங்கள் உண்டோ செப்பாய் பராபரமே
                                                           _ ஸ்ரீ தாயுமானவ சுவாமி

       அநித்தியமான உடலை வைத்து தான் நித்தியமான வஸ்துவை அறிய முடியும். அதனால் அநித்தியமான உடலையும் மதிக்க வேண்டும். இதேப் போலத்தான் பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தையும் ஓர் விதத்தில் மதிக்க வேண்டும். இந்த அநித்தியமான அனைத்தையும் ஓர் விதத்தில் மதிக்க வேண்டும் என்பதன் தாத்பரியம் அனைத்தும் அந்த பரவஸ்துவேதான் என்பதாகும்.

இதனால் தான் இராமலிங்க அடிகள் வள்ளலார், "வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்" என்று கூறினார்

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே
                                    _ திருமந்திரம்


அண்டம் அணைத்திலுமாய் அப்பாலுக்கு அப்பாலும்
கொண்டநின்னை யார் அறிந்து கொள்வார் பராபரமே

அண்டபிண்டம் காணேன் அகமும் புறமும்ஒன்றாக்
கண்டஎன்னை நீகலந்த காலம் பராபரமே

எங்குஎங்கே பார்த்தாலும் எவ்உயிர்க்கும் அவ்உயிராய்
அங்குஅங்கு இருப்பதுநீ அன்றோ பராபரமே

அன்பைப் பெருக்கிஎனது ஆருயிரைக் காக்கவந்த
இன்பப் பெருக்கே இறையே பராபரமே

எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறுஒன்று அறியேன் பராபரமே

அன்பர்பணி செய்யஎனை ஆள்ஆக்கி விட்டுவிட்டால்
இன்பநிலை தானேவந்து எய்தும் பராபரமே
                                                 _ ஸ்ரீ தாயுமானவ சுவாமிகள்

      ஆண், பெண், குழந்தை ஒவ்வொருவரையும் கடவுளாகப் பாருங்கள். நீங்கள் யாருக்கும் உதவி செய்ய முடியாது, சேவை தான் செய்ய முடியும். பகவானுடைய குழந்தைகளுக்குச் சேவை செய்யுங்கள், உங்களுக்கு அந்தப் பேறிருந்தால் அதன் மூலம் ஆண்டவனுக்குச் சேவை செய்தவர்கள் ஆவீர்கள். தம் குழந்தைகளுள் ஒருவருக்கேனும் உதவும் பேற்றை ஆண்டவன் உங்களுக்கு அளிப்பானானால் நீங்கள் அருள் பெற்றவர்கள்.
                                                                        _ சுவாமி விவேகானந்தர்
  
       இதனை எல்லாம் உள்ளது உள்ளபடி அறிந்துக்கொண்டு சமூகத்திற்கு புறம்பானவர் போலும் சமூகத்தில் இருந்து, ஒதுக்கப்பட்டவர் போல் ஓர் இடத்தில் அமைதியாக அமர்வது தான் முதிர்ந்த அஞ்ஞானம்.


அகிலாண்டமும் தானும் ஒன்று என்று
உணர்பவனுக்குத் தனித்திருத்தல் என்பது எதற்கு?
                                           _ ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அருள் விருந்து

ஸ்ரீ ராமனுக்கு உலகைத் துறக்க வேண்டும் என்ற விரக்தி வந்தது. அப்போழுது வசிஷ்டர் பகர்ந்ததாவது : "ராமா, சற்று விசாரித்துப்பார். பிரபஞ்சம் என்பது பிரப்பிரம்மத்துக்கு அந்நியமாக இருக்கிறதா? துறப்பது எதை? பற்றிப்பிடிப்பது எதை? என்று எண்ணிப்பார் எல்லாம் பிரம்மம்தானே!

                                          _ ஸ்ரீ இராமகிருஷ்ணர் உபதேச மஞ்ஜரி

Wednesday, 4 March 2015

☼21-விழியும் வழியும்-21☼ -மனம் மூன்று123,etc... ‍‍۞தாஸோஹம் பிரபு۞

மனம் மூன்று வகைப்படுத்தலாம். அவைகள்
  மேல் மனம் (conscious mind)
  நடு மனம் (sub-conscious)
  ஆழ் மனம் (super-conscious)

     இதில் மேல் மனம் என்பது, உடல் சம்பந்தமுடையது. இந்திரியங்கள் மூலம் அறிவது, செய்வது.

     நடு மனம் என்பது உணர்வுகள் சம்பந்தப்பட்டது. அன்பு, இன்பம், துன்பம் முதலியன. இதில் அன்பை மையமாக வைத்துக்கொண்டு பார்த்தால் சிலர் அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக கட்டாய பயிற்சி செய்கிறவர்கள் உள்ளனர். அவர்கள் எந்த அளவுக்கு அன்பை மேம்படுத்தி பயிற்சி செய்ய முற்படுகிறார்களோ அதே அளவுக்கு வெறுக்கவும் தயார் ஆவார்கள். அன்பு என்பது யதார்த்தமாக வருமாகில் அதுவே உண்மையான அன்பு. அன்பு எக்காரணத்துக்காகவும் மாறாது. கட்டாயத்தில் ஏற்படுத்தியது என்றும் நிலைத்திருக்காது. அன்பு மட்டுமல்ல நாம் பல வேலைகளில் இதை செய்ய வேண்டும் என்று நினைத்திருப்போம் பின்பு அடுத்த வேலைகளில் சோம்பேறித்தனம் ஆகிவிடுவோம். அதாவது மனம் முன்பு ஒன்று நினைக்கும் பின்பு வேறொன்றை நினைக்க நேரிடும். இதற்கு காரணம் யதார்த்தமாக இல்லாதது தான்.

     இதில் ஆழ்மனம் என்பது ஞானம். நம் உள் இருந்து உதித்தாலும் வெளியில் உள்ள பொருளை சம்பந்தப்படுத்துவது. அப்போது உள் (அகம்) என்றும் வெளி (புறம்) என்றும் ஒன்றும் தெரியாது. பிரபஞ்சம் வேறு அல்ல நான் வேறு அல்ல இரண்டும் ஒன்றுதான் என்பதாகும்.

சினம் இறக்க கற்றாலும் சித்தி எல்லாம் பெற்றாலும்
மனம் இறக்க கல்லார்க்கு வாய்ஏன் பராபரமே
                                                        - ஸ்ரீ தாயுமான சுவாமி

மரப்பாவை போலொரு மண்ணுருச் செய்து
வளமான சீவனெனும் சூத்திரம் மாட்டி
திறக் குள்ளிருந்தசைப் போன் தீர்ந்தபொழுதே
தேகம் விழுமென்று தெளிந்தாடு பாம்பே
                                                - பாம்பாட்டிச் சித்தர்

      பொம்மலாட்டத்தில் மறைவாய் திரைக்கு பின்னால் இருக்கும் ஒருவர் இயக்க, பாவைகள் மேடையில் ஆடுவதைப் போன்றதே மனித வாழ்க்கை. ஆட்டுவிப்பவன் நிறுத்தினால் ஆட்டம் நின்று போய்விடும்.

      திருவிளையாடல் படத்தில் ஒரு பாடலின் "பாட்டும் நானே" என்று பாடகர் பின்னனியில் இருந்து பாடுகிறார். அவர் பாடுவதற்கு ஏற்ப வாய் அசைத்து நடிகர் ஒருவர் தானே பாடுவதுப்போல் நடிக்கிறார். இதில் முதல் தத்துவம் அடங்கி இருக்கிறது. இதில் இறைவன் கர்த்தா(ஆட்டுவிப்பவர்) நாம் கருவி என்று புரிகிறது. இதில் மனிதர்கள் "நான்" தான் பேசுகிறேன், பார்க்கிறேன், கேட்கிறேன், நுகர்கிறேன், உணர்கிறேன், அனைத்தையும் செய்கிறேன் என்று அகங்காரமாக நினைக்கிறார்கள். நீ அரசனாக இருந்தாலும் அந்த ஆண்டியை (முருகனை) மறக்கக் கூடாது. இது அகங்காரத்தையும் மமகாரத்தையும் நீங்க ஒரு எளிய வழி.

      இப்போது இரண்டாம் தத்துவத்தை பார்த்தால் புராண ரீதியாக சிவனே உண்மையில் வந்து பாடி நடித்து இருக்கிறார். இதில் அனைத்திற்கும் சிவனாரே சம்பந்தப்பட்டு இருக்கிறார். அச்சூழ்நிலையை அமைத்ததும் சிவனாரே. ஆகையால் காரணம் , காரியம் அவரே என வந்து அமைகிறது. அனைத்தும் சிவனே என்பது தான் ஞானம்.

ஆதியுட னந்தமுமே பிரம ரூப
            மடிமுடிவு நடுவெவையும் பிரம ரூபம்
பூதமொடு பவிடியமும் பிரம ரூபம்
            பொருந்திநிகழ் பொருளெவையும் பிரம ரூபம்
பேதமிலாப் பிரமமலா தணுவு மில்லை
            பிரிவெனவே காண்பவெலாம் பிரமரூப
மாதியிலாப் பரமசிவன் பதந்தன் னாணை
            யறைகின்றே னையமிலை சக்தி யந்தான்

                                                        - ரீபு கீதை (11-16)