Tuesday, 3 March 2015

☼20-விழியும் வழியும்-20☼ - ‍‍உடல் தன்மை Must Learn Every !One!۞தாஸோஹம் பிரபு۞

நாம் இப்போது உடல் தன்மையைப் பற்றி ஆராயப் போகிறோம்.

ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்கு கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்கு கிட்டுமென்றால்
ஊற்றைச் சடலம் விட்டேஎன் கண்ணம்மா !
           உன்பாதஞ் சேரேனோ !
                                  - அழுகணிச் சித்தர்

உடம்பினை முன்னம் இழுக்கு என்றஇருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே.
                                                     - திருமந்திரம்

        மேற்கூறிய இரண்டு பாடல்களின் பொருள்கள் வேறுப்பட்ட கருத்துக்களை கூறினாலும், இந்த இரண்டு பாடல்களும் உண்மை தான்!

      இந்த சரீரம் பொய், இதில் இருக்கும் ஆன்மா உண்மை. அதனால் உடல் மேல் வைத்திருக்கும் அபிமானத்தை விடவேண்டும்.

நந்த வனத்திலோ ராண்டி - அவன்
            நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்
            கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி.
                                     -கடுவெளிச் சித்தர்

      இப்படியும் வந்த நோக்கத்தை மறந்து இஷ்டப்படி வாழ்ந்து தன்னை மாய்த்துக் கொள்வதிலும் அர்த்தமில்லை.

     அனித்தியமான உடலை கருவியாக பயன்படுத்தி பாரமார்த்திக பெருவாழ்வு வாழ ஆத்ம சாதனையை மேற்கொண்டால் தான் மோக்ஷத்தை அடையமுடியும்.

மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும்தன் வாயில் மட்டே
இனமான சுற்றமும் மயானம் மட்டே _ வழிக்கேது துணை?
தினையாம் அளவு எள் அளவாகினும் முன்பு செய்தவம்
தனையாள என்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே.
                                              - பட்டினத்தார்

         இந்த உடலை கருவியாக துணைக்கொண்டு தான் தன்னில் தானாக சுயம்பிரகாசமான சத் சித் ஆனந்தத்தை அறிந்து உணர முடியும்.
        தான் பெற்ற சரீரத்தை அலட்சியமாக நினைத்து வாட்டி வதைக்கக் கூடாது. நமது உடலையே வாட்டக்கூடாது என்றபோது கண்டிப்பாக நமக்கு அடுத்தவர் சரீரத்தை சேதப்படுத்துவதற்கு நமக்கு உரிமை இல்லை.
        உடல் சுக போகத்துக்காக மயக்கத்தில் கட்டுண்டு கிடக்காமல் பார்த்துகொள்ள வேண்டும். சமநிலையாக உடலை வைத்து தான் அனைத்துக்கும் மேலான முக்தி என்னும் இலக்கை அடைய முடியும்.

 அநித்தியத்தைக் கொண்டு நித்தியத்தை அடைக.
                                            _ பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர்

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தான் இருந்தானே
                                        -       திருமந்திரம்

      சரீரத்தில் 96 ( 8 எண் சாண் உடம்பு * 2 வெளிமூச்சு உள்மூச்சு * 6 அறிவின் மூலம் உணர்வது = 96) தத்துவங்கள் அடங்கியுள்ளது. பர தத்துவத்தை அடைய நாம் முயல வேண்டும். இப்போது நாம் உடல் தத்துவமான 96 தத்துவத்தை விசாரம் செய்து பார்ப்போம்.

ஸ்தூல சரீரம் : நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று என்னும் ஐந்து தூல, சூட்ச்சம பஞ்ச பூதங்களால் ஆனது நம் உடல்.

      இதில் சூக்ஷ்ம பூதங்கள் ஐந்தும் ஸ்தூல பூதங்களாக மாறுவதற்குப் பஞ்சீரணம் என்று பெயர்.

.டு:
      ஸ்தூல ஆகாசம் = 1/2 சூக்ஷ்ம ஆகாசம் + 1/8 சூக்ஷ்ம வாயு + 1/8 சூக்ஷ்ம அக்னி + 1/8 சூக்ஷ்ம அப்பு + 1/8  சூக்ஷ்ம ப்ருத்வி

     பிருத்வியின் (நிலம் ) கூறாகிய எலும்பு, தசை, மயிர், தோல், நரம்பு, என்னும் ஐந்து ; அப்புவின் (நீர்) கூறாகிய இரத்தம், சிலேத்துமம், வியர்வை, சுக்கில சோணிதங்கள் என்னும் ஐந்து ; தேயுவின்(நெருப்பு) கூறாகிய இருதயச் சூடு, சீரணச் சூடு, நயனச் சூடு, தேகச்சூடு, பயித்தியச் சூடு, என்னும் ஐந்து கூறுகள்.

வாயில்கள் 9 : செவிகள் 2, கண்கள் 2, நாசிகள் 2, வாய் 1, பெண் அல்லது ஆண் குறி 1, குதம் அல்லது மலவாய் 1.

பொறிகள் 10 : ஞானேந்திரியம் 5 மற்றும் கர்மேந்திரியம் 5
             ஞானேந்திரியங்கள் : (அனுபவிக்க உதவும் சக்தி) செவி, தோல், கண், நாக்கு மற்றும் மூக்கு
                         கர்மேந்திரியங்கள் : ( வெளிப்பட உதவும் சக்தி ) வாக்கு, பாதம், பாணி, பாயு, மற்றும் உபத்தம்


புலன்கள் : தன்மாத்திரைகள் 10:
சப்தம்          ஆகாசத்திலும் செவியிலும் ஒடுங்கும்
பரிசம்          காற்றிலும் தோலிலும் ஒடுங்கும்
ரூபம்           தீயிலும் கண்ணிலும் ஒடுங்கும்
ரசம்            நீரிலும் நாவிலும் ஒடுங்கும்
கந்தம்          மண்ணிலும் மூக்கிலும் ஒடுங்கும்
வசனம்         ஆகாயத்திலும் வாக்கிலும் ஒரிங்கும்
கமனம்         வாயுவிலும் பாதத்திலும் ஒடுங்கும்
தானம்         தீயிலும் கையிலும் ஒடுங்கும்
விசர்க்கம்      நீரிலும் எருவாயிலும் ஒடுங்கும்
ஆனந்தம்      மண்ணிலும் கருவாயிலும் ஒடுங்கும்

ஆதாரங்கள் 6 :
 மூலாதாரம் : (மூலம் ) _ காலெலும்பும் கதிரெலும்பும் குதத்திற்கும் குய்யத்திற்கும் நடு.
 சுவதிஸ்டானம் :(மேல் வயிறு) _ மூலாதாரத்திற்கு இரண்டு விரற்கடைக்கு மேலே இருப்பது
 மணிபூரகம் : (தொப்புள் ) _ சுவாதிஸ்டானத்திற்கு எட்டு விரற்கடைக்கு மேலே இருப்பது
 அனாகதம் : (நெஞ்சம் ) _ மணிபூரகத்திற்கு பத்து விரற்கடை அளவு மேலே இருக்கும்
 விசுத்தி : (கழுத்து ) _ அனாகதத்திற்கு பத்து விரற்கடைக்கு மேலே இருப்பது
 ஆக்ஞை : (புருவமத்தி ) _ விசுத்திற்கு பன்னிரெண்டு விரற்கடைக்கு மேலே இருப்பது.

மண்டலங்கள் 3 :
அக்னி மண்டலம் : மூலாதாரத்திற்கு இருவிரற்கடைக்கு மேலிருக்கிறது
சூரிய மண்டலம் : உந்திக்கு நான்கு விரற்கடைக்கு மேலிருக்கிறது
சந்திர மண்டலம் (அமிர்தத்தாரை) : சிரத்தின் நடுவில் பிரகாசமாய் இருக்கிறது.

நாடிகள் 10 :
இடைகலை (சந்திர கலை) _ வலதுக்கால் பெருவிரல் நரம்பிலிருந்து இடது பக்க மூக்கு நரம்பு வரை. இடது மூக்கில் நடக்கும் மூச்சு ( சக்தி நாடி)
பிங்கலை (சூரிய கலை) _ இடதுக்கால் பெருவிரல் நரம்பிலிருந்து வலது பக்க மூக்கு நரம்பு வரை. வலது மூக்கில் நடக்கும் மூச்சு (சிவன் நாடி)
சுழுமுனை (அக்கினி கலை) _ மலவாய் முதல் தலையிலுள்ள பிரம்ம கபாலம் வரையில் திரிந்து கொண்டிருக்கும் நாடி (சுசூம்னா நாடி ) நடு மூச்சு.
சிகுவை - உள் நாக்கு நரம்பு. இது அன்னத்தையும் பானங்களையும் விழுங்கச் செய்யும்.
புருடன் - வலக்கண் நரம்பு.
காந்தாரி - இடக்கண் நரம்பு.
அத்தி - வலது காது நரம்பு.
அலம்புடை - இடது காது நரம்பு.
சங்கினி - கருவாய் நரம்பு. இது மூலாதாரம் முதல் லிங்கத்திற்கு(ஆண், பெண் இனக்குறி ) வரை வந்து நிற்கும்.
குரு - மலவாய் நரம்பு. மலவாய் வரை வந்து நிற்கும் நாடியாகும்.
இவை அனைத்தும் ஆகாயத்தின் கூறுகளாகும்.
வாயுக்கள் 10 ;
பிராணன் (உயிர்க்காற்று) - இருதயம் இதன் ஸ்தானம். உட்கொண்ட உணவு ஜீரணிக்கப்பட்டு , அந்த சக்தியை எல்லா உறுப்புகளுக்கும் எடுத்துச் சென்று கொடுப்பது. நாம் வெளியே விடும் மூச்சுக்காற்று. இதை வைத்து தான் உயிருடன் இருக்கிறோமா என்பதை அறிய முடியும்.

அபானன் (மலக்காற்று) - குதம் இதன் ஸ்தானம். மல, மூத்திரங்களை கழித்தல். நாம் உள்ளே இழுக்கும் மூச்சுக் காற்று.

வியானன் (தொழிற் காற்று) - உடல் முழுவதும் வியாபித்திருக்கும் காற்று (இரத்தத்தை எடுத்துச் செல்வது). ஸ்பரிச உணர்வை அனுபவிக்க உதவும்.

உதானன் (ஒலிக்காற்று) - கழுத்து இதன் ஸ்தானம். சுவாசம் செய்தல், தூங்கும் போது பொறிகளை வேலை செய்யாமல் தடுத்தும் துயில் எழுந்த பின்பு பொறிகளை வேலை செய்ய உதவும்.

சமானன் (நிரவுக்காற்று) - தொப்புள் இதன் ஸ்தானம். ஆகாரங்களை ஜீரணம் செய்தல். நாடி நரம்புகளுக்கு சமமாக அன்னரசத்தை பங்கிட்டு தந்து உடலை வளர்க்கும்.

நாகன் (விழிக்காற்று ) - வாந்தியை உண்டுபண்ணும். கண்களினால் பார்க்கச் செய்யும், முக்கல், சோம்பல், திமிரல், முதலியன உண்டாக்கும்.

கூர்மன் (இமைக்காற்று) - கண் இமைத்தல், மயிர்க்கூச்சம், சரிப்பு முதலியன உண்டாக்கும்.

கிருகரன் (தும்மற் காற்று ) - தும்மலை உண்டாக்கி, கண்களிலிருந்து கண்ணீரை வரவழைத்துவிடும்.

தேவதத்தன் (கொட்டாவிக் காற்று) - கொட்டாவியையும், விக்கலையும் உண்டாக்கும்.

தனஞ்செயன் (வீங்கற் காற்று) - கர்ப்பத்திலுள்ள பிண்டத்தை வெளியே தள்ளுவதோடு மூலாதாரத்தில் சுருண்டு கிடக்கும், பிண சரீரத்தை வீங்கச் செய்தல், உடலை நாற்றமெடுக்கும்படி செய்யும். தகனம் செய்யும் வரை உடம்பிலேயே இருந்து இறுதியில் கபாலத்தை பிளந்துக்கொண்டு வெளியேறும்.

இவை அனைத்தும் வாயுவின் (காற்று) கூறாகும்.

தாதுக்கள் 7:
 இரசம், செந்நீர் (இரத்தம்), ஊன் (மாமிசம்), கொழுப்பு, எலும்பு, மூளை, வெண்ணீர் (விந்து,சுரோணிதம்)

இராகங்கள் 8:
  காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம், இடும்பை, அகங்காரம்.
பஞ்ச கோசங்கள் 5:
அன்னமயகோசம் - தாய், தந்தையரின் அன்னத்தினால் வீரியத்தில் இருந்து தோன்றின சரீரம். நாம் உண்ணும் அன்னத்தினால் வளர்ச்சி அடைகிறோம். இறந்த பிறகு பிற உயிர்களுக்கும் அன்னமாகும். இது தூல சரீரம்.
பிராணமய கோசம் - பிராணன் ஐந்து கர்மேந்திரியங்கள். இது சூட்சம சரீரம்.
மனோமய கோசம் - மனமும், ஐந்து ஞானேந்திரியங்கள். இதுவும் சூட்சம சரீரம்.
விக்ஞானமய கோசம் - புத்தியும் ஐந்து ஞானேந்திரியங்கள். இதுவும் கூட சூட்சம சரீரம்.
ஆனந்தமய கோசம் - அவித்யா ரூபம். இதனால் தான் அறியாமை உண்டாகிறது. இது காரண சரீரம்.

அந்தகரணங்கள் 4 :
மனம் - நினைக்கும் சக்தியுடையது
புத்தி - விசாரிக்கும் சக்தியுடையது
சித்தம் - முடிவு செய்யும் சக்தியுடையது
அகங்காரம் - காரியத்தை நடத்தும் சக்தியுடையது

அவஸ்தைகள் 5:
ஜாக்கிரதம் - விழிப்பு நிலை
சொப்பனம் - கனவு நிலை
சுஹ¤ப்தி - ஆழ்ந்த உறக்கம்
துரியம் - சவிகற்ப சமாதி
துரியாதீதம் - நிர்விகற்ப சமாதி

குணங்கள் 3 :
ஸாத்வீகம் - நன்மை (நற்குணங்கள்)
ராஜஸம் - மன எழுச்சி (ஆவேசம்)
தாமஸம் - மயக்கம் (மந்தத் தன்மை)

நாம் குணம் கடந்து குண அதீத நிலைக்குப்போக முற்பட வேண்டும்.

மலங்கள் 3 :
 ஆணவம், கன்மம், மாயை

வியாதிகள் 3 :
 வாதம், பித்தம், கபம் (சிலேத்துமம)

ஸ்தூல உடல் - 96 தத்துவங்களும்
சூட்சும உடல் - ஞானேந்திரியங்கள் 5, கர்மேந்திரியங்கள் 5, அந்தகரணம் 4, பிராணன் 1, ஆக 15 தத்துவங்கள் உடையது.


         இச்சரீரத்தில் 6 பாவ விவகாரங்களைக் கொண்டது. அவைகள்
 இருப்பு (கர்பத்தில் இருப்பது) , பிறப்பு, வளர்ச்சி, மாற்றம், சிதைவு, மற்றும் மரணம்.
நாம் அவைகளுக்கு சம்பந்தப்பட்டும் அப்பாற்பட்டும் பார்ப்பவர்கள்!

பொய்யெல்லாம் ஒன்றாய் பொருத்திவைத்த பொய்உடலை
மெய்என்றால் மெய்யாய் விடுமோ பராபரமே.
                                                                - ஸ்ரீ தாயுமானவ சுவாமி


தூலமுடன் ஜாக்கிரமும் பிரம்மமாகும்
சூச்சமுடன் சொப்பனமும் பிரம்மமாகும்
மூலமுறும் சுழுப்தியுமே பிரம்மமாகும்
மூன்றின பமானிகளும் பிரம்மமாகும்
கோலமுறும் வியஷ்டியுமே பிரம்மமாகும்
கூட்டமுறும் சமஷ்டியுமே பிரம்மமாகும்
காலமுதலெப் பொருளும் பிரம்மமாகும்
காண்கின்ற காட்சியெல்லாம் பிரம்மமாகும்
                                               - ரிபு கீதை

       வெயில் நேரமான மதிய நேரத்தில் ஒருவர் நின்று கொண்டு இருக்கிறார். அப்போது அவரின் நிழல் பூமியில் தெரிகிறது. வேறொருவர் கத்தியால் அந்த நிழலை குத்துகிறார் சரீர ஞாபத்துடன் இருக்கும் நபருக்கு தெரியும் இதனால் பாதிப்பு எனக்கு இல்லை என்றும் இதில் குத்தினவர் அறியாமையில் இருக்கிறார் என்றும் தெரியும். அதே அந்த கத்தியை எடுத்து சரீர ஞாபகத்துடன் இருக்கும் நபரை குத்தினால் பாதிப்பு ஏற்பட்டது என்று உடலில் பந்தப்பட்டவர் கண்டிப்பாக நினைப்பார். ஆனால் ஞானிக்கு (உண்மை சொரூபத்தை அறிந்தவர்) இதனால் ஆத்மாவாகிய எனக்கு பாதிப்பு இல்லை என்றும் , இதில் குத்தியவர் அறியாமையில் இருக்கிறார் என்ற உண்மை அவருக்கு புலப்படும்.

       இதற்குச் சான்று, ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சருக்கு சுவாமி திரிகுணாதீதானந்தர் நேர் சிஷ்யராய் இருந்தவர். அமெரிக்காவில் அவர் மதப்பிரசாரம் செய்து கொண்டிருந்த பொழுது வெறிபிடித்த ஒருவன் அவர்மீது குண்டு போட்டு கொன்றுவிட்டான். அந்த மகான் உயிர் துறப்பதற்கு முன்பு "அறியாமையால் குற்றம் செய்த அம்மனிதனை மன்னித்துவிடுங்கள்" என்று சொல்லி விட்டு அவர் சரீரத்தை விட்டுச் சென்று விட்டார்.


       உடலை தான் என்று எண்ணுகிற உணர்வு தேகாத்ம புத்தி. பந்தாத்மானவன் மாயையிலிருந்து நீங்க ஆத்ம விசாரனையை மேற்கொண்டு முக்தாத்மாக முற்பட வேண்டும்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.