Wednesday, 8 April 2015

ஜாதகத்தை சாதகமாக்க-27ஞானப்பாதை27

 நீங்கள் செய்யும் செயலுக்கு ஏற்ப 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் மற்றும் 9 நவகிரகங்கள் இவை அனைத்தும் உங்கள் நன்மைக்காக நீங்களே மாற்றி அமைக்கலாம் !
                     ஞானப்பாதை
                                                                       _ தாஸோஹம் . பிரபு

1. எதையும் பற்றுற்று (விருப்பு வெறுப்பு இல்லாத நிலை) சாட்சியாக பார்க்க பழகிக்கொண்டால் துன்பத்துக்கு ஒரு போதும் நம்மிடம் வழி இல்லை, இதுவே ஞானத்தின் வழி.

2. எதையும் ஆத்ம சாதனையாக கையாண்டு, இதனால் வரும் இன்பமோ துக்கமோ அதனை ஞானத்தின் துணைக்கொண்டு ஈஸ்வர பிரசாதமாக நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஏற்றுக்கொண்டதெல்லாம் கொடுப்பதற்கு என்பதால் ஈஸ்வரனுக்கே அர்ப்பணம் செய்ய வேண்டும்.

3. அகங்காரமும், மமகாரமும் நீக்கி எவன் ஒருவன் பரமனிடம் சரணாகதி அடைகின்றானோ அவனே பிறவிப் பெருங்கடலை நீந்தி பரமனாகிய கரையை அடைய வல்லவன்.

4. எவன் ஒருவன் விலை மதிப்பற்ற எளிமை என்னும் வீட்டில் தஞ்சம் புகுகின்றானோ அங்கு எதிலும் நிறைவு பெற்று இருப்பான்.

5. பொறாமை என்னும் காடும், கோபம் என்னும் தீயும் சேர்ந்தால் முதலில் தன்னையும் அழித்து பிறகு சுற்றத்தையும் அழித்து வனத்தையே விரைவில் சாம்பலாக்க வல்லது.

6. என்கிற எழுத்தை பின்தொடர்ந்து ஏனைய எழுத்துக்கள் பின் தொடர்ந்து இருப்பது போல அன்பு என்கிற தெய்வீகத்தை பின் தொடர்ந்து சகலமும் பின் தொடர்வதில் வியப்பு ஒன்றும் இல்லை.

7. எவன் ஒருவன் இப்பிரபஞ்சத்தில் நிறைவை காண்கின்றானோ அவனே இயற்கையின் திட்டத்தை நன்கு அறிந்தவன் ஆகிறான்.

8. எதிர்பார்ப்பு எங்கு உதிக்கிறதோ அங்கு அமைதி மறைகிறது. எதிர்பார்ப்பை விட்டெறிந்து, வந்து சேர்வதெல்லாம் நிலையற்ற சம்ஸ்காரங்களைத்தான் ஏற்படுத்தும் என அறிந்து தன்னில் தானே முழு திருப்தியைக் காணவேண்டும்.

9. இறை வழியில் ஐம்புலனை பயன் படுத்தினால் தான் அப்பேரின்பத்தை அடையமுடியும். இதனால் பஞ்சபூதங்களை ஆளுமையில் எடுத்துக்கொண்டதாக பொருள்.

10. பயம் என்பது தற்கொலை. அறியாமையால் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

11. பிரமச்சரிய விரதத்தை தன்னளவில் மட்டும் மேற்கொள்வது தவறு. நாம் எவ்விதத்தில் வெளிப்பொருள்களை கையாளுவதின் பொருட்டு நம்மிடத்தில் பிரம்மச்சரியம் வந்து அமைகிறது. அப்போது தான் சந்நியாச விரதத்தை அனுஷ்டிக்க முடியும்.

12. பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்திலும் தத்துவத்தின் மாண்பை உணர்ந்து செயலை செய்வானாகின் தோஷம் ஒரு போதும் அவனை பின் தொடராது, இதன்மூலம் புத்திசாலித்தன வாழ்க்கையை நடத்துவனாகிறான்.

13. அடுத்தவர்கள் உரிமைகள் கொடுத்த போது உரிமைகளை மீறி செயல் பட நினைத்தீர்கள் என்றால் அதுவே தவறான சுதந்திரம்.

14. அசுர குணத்திலிருந்து தன்னை மீட்டு எடுக்கத் தன்னை ஆயுத்த படுத்துவானாயின் அதுவே அவனுக்கு கிடைக்க இருக்கிற தெய்வீகம்.

15. எதை செய்தாலும் ஆழ் மனதில் சற்று சிந்தித்து பாருங்கள் முடிவு எடுக்க தெரியவில்லை என்றபோது தாய் தந்தை இருந்தால் நாம் செய்யும் செயல்களுக்கு ஆதரவு தருவார்களா? என்று பாருங்கள் இல்லையெனில் அப்போதே மறந்து விடுங்கள். அக்காரியத்தின் பயனை அவர்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள்.

16. ஒருபோதும் பிறரோடு ஒப்பிட்டு பார்க்காமல் தனக்கென ஒரு இலக்கை ஏற்படுத்தி தன்னம்பிக்கையுடன் செயல் பட வேண்டும்.

17. பரம்பரை கோடீஸ்வரனாக இருக்கையில் எளிமையாக கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால் ஏழையாக இருந்து தக்க உழைப்பால் கோடி கோடியாக பணம் குவிந்த போது அவன் எளிமையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவன் விருப்பப்படி மிக விரைவில் ஆடம்பர ஆசைகளை பூர்த்தியாக்கி விட்டு பின்பு அவனும் கட்டாயம் எளிமையாக இருக்க கடமைப்பட்டு இருக்கிறான். இதன் மூலம் தான் இருபாலரும் ஓர் விதத்தில் எல்லை இல்லா ஆனந்தத்தை உணர்வார்கள்.

18. அணுகுமுறை என்பது நீங்கள் எப்படி வெளிப்படுத்துகிறீர்கள் என்பது மட்டும் அல்ல. எவ்வாறு மனப்பக்குவத்துடன் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதும் தான்.

19. தன்னடக்கத்தை மேற்கொண்டால் மட்டும் தான் தனிமனித ஒழுக்கம் ஏற்படும்.

20. எளிமை, பொறுமை, அறிவு, துணிவு, விடாமுயற்சி, யாவும் ஒன்று சேர்ந்தால் நிச்சயம் வெற்றி.

21. உடல், மனம், புத்தி இவைகள் "நான்" இல்லை என்றபோதிலும், இவை அனைத்தையும் மதிக்க வேண்டும்.. அதேப் போலத்தான் பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தையும் வணங்க வேண்டும்.

22. பிரம்மச்சரிய ஆசிரமத்தில் இருப்பவர் பிறர் மனைவியையும் மகளையும் அன்னை பராசக்தியாகவே காண வேண்டும்.

23. இறையில் தெள்ளத்தெளிந்தவனாக இருக்க தன்னை விழிப்புடன் சிறந்த யுக்தியின் மூலம் பக்குவப்படுத்த வேண்டும்.

24. ஏமாறுவது ஏமாற்றம் இல்லை இப்பாடத்தில் கற்றதை துணைக்கொண்டு அடுத்த பாடத்தை விழிப்புணர்வுடன் தானே நடத்த வேண்டும். அடுத்த பாடத்தை நன்கு நடத்த முடியாதவனே ஏமாறுபவன் ஆகிறான்.

25. தெய்வீக உணர்வோடு நடத்தும் அனைத்து கர்மங்களுக்கும் தெய்வமே பொறுப்பு ஏற்கிறது.

26. ஓயாமல் போராடி கொண்டு இருப்பது வாழ்க்கை அல்ல. ஓயாமல் ரசிக்க யுக்தியை கையாளுவது தான் வாழ்க்கை.


27. கெட்ட எண்ணங்கள் மனதில் வருவதால் தவறு அல்ல. அதன் போக்கில் விட்டு நாம் பெரிது படுத்தி சிந்திக்காமல் விட்டால் மனது அவ்வெண்ணத்தை விட்டு விடும். அதனுடன் நாம் போராடினால் அவ்வெண்ணங்கள் பலப்பட்டு நம்மையே அது ஆளக்கூடிய அளவுக்கு வீரியம் ஏற்பட்டு விடும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.