Thursday, 19 February 2015

☼16-விழியும் வழியும்-16☼ - கோயில் அமைப்பு மனித உடலின் அமைப்புதான்! ‍‍۞தாஸோஹம் பிரபு۞

தெய்வீக தன்மை எங்கும் நிறைந்திருந்தாலும் கோயிலிலுள்ள மூர்த்திகளின் வாயிலாகத்தான் உயிர்கள் அருள் ஆற்றலைப் பெற முடியும். பசுவின் உடல் முழுவதும் பால் பரவியிருந்தாலும், மடிக்காம்புகள் மூலமாகத்தான் பாலைப் பெற முடியும்.

 ஆலய வழிபாட்டில் பல விதமான சடங்குகளில் தத்துவங்கள் பொதிந்து கிடக்கின்றன. இதில் நமக்கு சடங்குகளும் தத்துவங்களும் அவசியமானவைகள் தான். அரிசிதான் நெற்பயிராக முளைக்கிறது என்றாலும் அரிசியை விதைத்தால் பயிர் முளைக்காது, உமியை விதைத்தாலும் பயிர் முளைக்காது. உமியுடன் கூடிய நெல்தான் நெற்பயிரக முளைக்கிறது. உமியைப் போன்றது சடங்குகள், அரிசியைப் போன்றது தத்துவங்கள். உதாரணத்திற்கு, ஒரு சடங்கைப் பார்ப்போம். தேங்காயை உடைக்கிறார்கள் என்றால் அதில் அகங்காரமாகிய குடுமியை அகற்றி பிடிவாதமாகிய வெளி ஓட்டை உடைத்து ஆசாபாசங்களாகிய நீரை அகற்றி தூய வெண்பருப்பை அதாவது தூய மனதை இறைவனுக்கே அர்ப்பணித்தல் என்ற தத்துவம் அடங்கியுள்ளது.

          கோயில்கள் தத்துவ ரீதியாக அமைக்கப்பட்டு இருக்கிறது. அதற்கேற்ப நாம் அங்கு நடந்துக்கொள்ள கடமைப்பட்டு இருக்கிறோம். கோயிலுக்கு உள்ளே சென்றதும் கொடி மரம் (நம் முதுகு தண்டிலுள்ள 33 முள் எலும்புகள்) அருகில் இருப்பது பலி பீடம். அதன் அருகில் சென்று நமது கீழான இயல்புகள் ( காமம், குரோதம், லோபம் முதலியன) பலியிடுவதாக நினைத்து ஆண்கள் சாஷ்டாங்கமாகவும், பெண்கள் பஞ்சாங்கமாகவும் வீழ்ந்து பலி கொடுத்து விட்டேன் என்று எண்ணி வணங்கி எழ வேண்டும். பின்பு மூர்த்தியின் (பரமாத்மன்) முன் வாகனம் (ஜீவாத்மன்) பார்த்த படி இருக்கும். இதுவே ஜீவாத்மனாகிய நாம் பரமாத்மனை அடைய வேண்டும் என்னும் நோக்கத்தில் எப்போதும் இருக்க வேண்டும் என்பதை குறிக்கும் முக்கியமான தத்துவ அமைப்பு. ஆதலால் எந்தக்காரணத்தைக் கொண்டும் மூர்த்திக்கும், வாகனத்துக்கும் இடையில் நுழையக்கூடாது. வலம் வரும்போது மூர்த்தியையும் வாகனத்தையும் சேர்ந்து வலம் வர வேண்டும். அப்படி வலம் வரும்போது கருவரையில் உள்ள மூர்த்தி நமக்கு வலது பக்கமாக இருக்கும்படி வலம் வர வேண்டும்.

        அரசர்கள் கட்டின கோயில்கள் தத்துவ விசாரம் இல்லாமல் கட்டவில்லை. நம் உடலின் (புறத்திலும், அகத்திலும் இருக்கும்) அக அமைப்பு தான் கோயில். உடலில் ஏதோ பாதிப்பு வந்தால் பெரியோர்கள் கோயிலுக்கு சென்று வேண்டி வரச்சொல்வார்கள். நாம் கோயிலுக்கு சென்று நமக்கு தெரியாமல் நம் உடலைத்தான் ஒருவிதத்தில் அங்கு வணங்குகிறோம். காரணம் நம் உடல் (நடமாடும் கோயில்) நமக்கு சரியாக வணங்கத் தெரியவில்லை.

  உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
  வள்ளல் பிரானாருக்கு வாய் கோபுரவாசல்
  தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
  கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே
                                                            _ திருமூலர்

உள்ளமாகிய மனம் கருவறை. உடம்பு கோயில். நமது வாய், ஆண்டவனை சென்று அடையும் வாயில். நன்றாக அறிந்து தெளிவு பெற்றவர்களுக்கு சீவனே சிவம் என்பது விளங்கும். அத்தகையோருக்கு வஞ்சனையைச் செய்யும் ஐந்து பொறிகளும் ஒளிமிக்க விளக்காக அமையும்.

       கோயில் அமைப்பு மனித உடலின் அமைப்புதான். ஒரு மனிதன் மல்லாந்துப் படுத்து கால்களை நேராக நீட்டியுள்ள நிலை தான் கோயிலின் அமைப்பு ஆகும்.

பாதங்கள் _ இராஜகோபுரம் (உலகிலுள்ள விஷியமைப்பை பொறித்தி வைத்திருக்கும்)
முழங்கால் _ ஆஸ்தான மண்டபம்
தொடை _ நிறுத்த மண்டபம்
தொப்புள் _ பலிபீடம்
மார்பு _ மகாமண்டபம்
கழுத்து _ அர்த்தமண்டபம்
தலை _ கர்ப்பகிரகம்
இருகைகள் _ தட்க்ஷ¢ணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் கோயில்கள்
வாய் _ ஸ்தபன மண்டபம்
புருவமத்தி _ லிங்கம் (மூர்த்தி)

தலை உச்சி _ விமானம்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.