Wednesday, 21 January 2015

☼07-விழியும் வழியும்-07☼ - சமாதி ‍‍۞தாஸோஹம் பிரபு۞

    இறந்தான பிறகு பூத உடலை ஜல சமாதி, வாசி சமாதி, மண்ணில் புதைப்பதை விட  நெருப்பில் இட்டு எரிப்பது தான் மேலானது.
         ஜல சமாதியோ, வாசி சமாதியோ, மண்ணில் புதைப்பதோ தண்ணீர் பாம்புக்கு சிக்கிய தவளை போல் அது திண்ணும், திண்ணாமலும் திண்டாடிக் கொள்ளும். அதேப்போல பூத உடலான பஞ்ச பூதங்கள் சரியாக விரைவில் போய் ஏற்ற பூதங்களிடம் கலக்காமல் திண்டாடும். அதே தவளை நாகப்பாம்பிடம் சிக்கினால் எவ்வளவு சீக்கிரம் இரையாகுமோ அது போன்று தீயில் சரீரத்தை எரிப்பது இயற்கையாகவே அதன் அதன் பூதங்களுக்கு சேர வாய்ப்பாக அமையும்.

       அந்தரங்கமாகவோ, பகிரங்கமாகவோ பக்தி உணர்வுடன் எந்த செயலை செய்தாலும் நமக்கும் அந்த இடத்திற்கும் சக்தி வளையத்தை ஏற்படுத்தும் தன்மை இயற்கையாகவே நமக்கு இறைவன் அளித்த வரப்பிரசாதம். இதில் அந்தரங்கம் என்பது நல்ல எண்ணங்களுடன் விரதம் போன்றவை, பகிரங்கம் என்பது நல்ல செயல்களுடன் விரதம் (யக்ஞாதி கர்மங்கள்)

        வழிபாட்டுக்குரிய இடமே சக்தி ஊட்டப்பட்ட இடமாக அமைகிறது. பஞ்ச பூதங்கள் தான் நம் அகத்திலும் புறத்திலும் ஸ்தூலமாக இருக்கிறது. அவைகள் நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், மற்றும் காற்று என்பனவே. நமக்கும் நம்மை சூழ்ந்தும் உள்ள பஞ்சபூதங்களின் சக்தி தொடர்பை மேம்படுத்த நீரை தீர்த்தம் ஆக்குகிறோம், மண்ணை திருநீரு, சந்தனம், குங்குமம் போன்றதாக ஆக்குகிறோம், நெருப்பை தீபம், பந்தம், தூபம், யாகம், கற்பூரம் மூலம் புனிதம் ஆக்குகிறோம்ஆகாசம் எங்கு இருக்கிறது அவைகளை கடாகாசம், ஜலாகாசம், மேகாகாசம், மகாகாசம், என்று பிரித்து நம்முள்ளே இருப்பதை கட ஆகாசமென்றும், வெளியே இருப்பதை மக ஆகாசமென்று கூறுகிறோம்இவ்விடத்தில் ஆகாசத்தை புனிதமாக்கிறோம். காற்று மூலம் மந்திரம், நாம ஜெபம், திருப்பதிகங்கள், மணி ஓசை, உடுக்கை, சங்கு நாதம், இன்னும் பல ஒலிகள் போன்றவை மூலம் நம்மையும் சுற்றத்தையும் தூய்மைப்படுத்தி ஸ்தூல பஞ்சபூதங்களை நல்ல முறையில் மேம்படுத்துகிறோம். இதனை தொடர்ந்து 21 நாள் அமைத்தால் பல பலன்களையும், பூத சுத்தியை செயல்படுத்தி நம் ஆளுமையால் பூத சித்தியை அடைய ஏதுவாக அமைகிறது. தினமும் அனுஷ்டித்தால் சக்தியை சம நிலையில் மேம்படுத்த வாய்ப்பாக அமையும்.

        சில சக்தி வாய்ந்த கிரியைகள் தடையில்லா சக்தியை பெற வாய்ப்பளிக்கிறது. இரண்டு புற நெற்றியில் மூன்று முறை கொட்டி மூன்று முறை தோப்புக்கரணம் போடுவதும், கை கூப்பி பல நிலைகளில் வைத்து வணங்குவதும், தீபாராதனை நெருப்பை கையில் வணங்கி கண்ணில் ஒத்தி தலையில் மேல் கொண்டு செல்வதும், கண்டிப்பாக ஆண்கள் சாஷ்டாங்கமாகவும், பெண்கள் பஞ்சாங்கமாகவும் வணங்க வேண்டும். தலை, இருகைகள், இருசெவிகள், இருமுழந்தாள், மார்பு ஆகிய எட்டு அங்கங்களும் பூமியில் படும்படி வீழ்ந்து வணங்குவது சாஸ்டாங்க நமஸ்காரம். இருகைகள், இருமுழங்கால்கள், தலை பூமியில் படும்படியாக முழந்தாளிட்டு வணங்குவது பஞ்சாங்க நமஸ்காரம். தீர்த்தம் வாங்கி வாயில் குடித்து கண்ணில் ஒத்தி தலையில் மேல் கொண்டு செல்வதும், தியானம், பிராணாயாமம், முத்திரை, மேலும் பல கிரியைகளை முறையாக அனுஷ்டித்தால் பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங்களும் நமது ஸ்தூல உடலிலுள்ள பஞ்ச பூதங்களும் நல்ல சக்தி பறிமாற்றம் பெற்று ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போக ஒரு வாய்ப்பாக அமையும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.